ராமநாதபுரம் அருகே மலேசியா லாட்டரி விற்ற முதியவர் கைது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பகுதியில் மலேசியாவில் விற்பனை செய்யப்படும் 4 எண் கொண்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை களை கட்டி வருகிறது. இதன் பொறுப்பாளர்கள் முக்கிய இடங்களில் பிரதி நிதிகளை நியமித்து விற்பனை செய்து வந்தனர். இந்த லாட்டரி சீட்டின் மோகத்தால் ஏராளமான ஏழை, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமாருக்கு புகார்கள் சென்றன. தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தேவிபட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் தலைமையில் போலீசார் பனைக்குளத்தில் உள்ள ஒரு பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்
அப்போது கிழக்கு பனைக்குளம் செய்யது ஓட்டல் அருகே லாட்டரி விற்பனையில் முதியவர் ஒருவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் உச்சிப்புளி அருகேயுள்ள இருமேனியை சேர்ந்த அபுல் ஹஸன் (வயது67) என தெரியவந்தது.
அவரிடம் நடத்திய சோதனையில் மலேசிய நாட்டின் ஆன்லைன் லாட்டரி முடிவுகளை கொண்ட தாள், மலேசிய லாட்டரி நம்பர்கள் பதிவு செய்யப்பட்ட புக், பணம் ரூ.19,270 இருந்தது. இதை கைப்பற்றிய போலீசார் அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து கைது செய்தனர். இது குறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.