செய்திகள்
கொலை

கோவை அருகே பஞ்சாயத்து துணை தலைவர் மனைவியை கத்தியால் குத்திய வாலிபர் கொலை

Published On 2021-01-05 07:49 GMT   |   Update On 2021-01-05 07:49 GMT
கோவை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன் பாளையம் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் கணேசன். தி.மு.க.வை சேர்ந்த இவர் வெள்ளமடை ஊராட்சி துணை தலைவராக உள்ளார். இவரது மனைவி துளசிமணி (வயது 38).

கணேசன் அந்த பகுதியில் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் ஜோதி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் (25) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

கடைக்கு வரும் கணேசன் அங்கு இருந்தபடி நண்பர்களுடன் மது குடிப்பது மற்றும் வெளியே சுற்றுவது வழக்கமாக கொண்டு இருந்தார். கணேசனின் நடவடிக்கை குறித்து சுரேஷ்குமார் அவரது மனைவி துளசிமணியுடன் தெரிவித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சுரேஷ்குமார் தனது மனைவியிடம் தன்னை பற்றி குறைசொல்வதை அறிந்த கணேசன் கடந்த 2 நாட்களுக்கு அவரை வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் சுரேஷ்குமார் மிகுந்த மனவேதனை அடைந்தார். அவர் தன்னை கணேசன் வேலையை விட்டு நீக்கியது குறித்து துளசிமணியிடம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கணவர் கணேசனிடம் கேட்டபோது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து துளசிமணி கணவரிடம் கோபித்துக்கொண்டு பெரியமத்தம்பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றார்.

வேலை போனதால் விரக்தி அடைந்த சுரேஷ்குமார் நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் இரவு அவர் துளசிமணியின் தந்தை நாகராஜின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு இருந்த துளசிமணியிடம் உங்களால் தான் என் வேலை போனது என கூறி தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. துளசிமணியின் தந்தை நாகராஜ் அவர்களை சமாதானப்படுத்தினார்.

ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து நாகராஜை குத்தினார்.

இதில் அவரது தலை, கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

அதிர்ச்சியடைந்த துளசிமணி தனது தந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது சுரேஷ் குமார் அவரையும் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து போதையில் இருந்த சுரேஷ்குமாரை கீழே தள்ளினர். பின்னர் அங்கு கிடந்த பெரிய கல்லை தூக்கி சுரேஷ்குமாரின் தலையில் போட்டனர். சுரேஷ்குமார் சம்பவஇடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பிரீத்விராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய நாகராஜ், துளசிமணி ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பின்னர் சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி குமார் கொடுத்த புகாரின் பேரில் பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News