செய்திகள்
கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க நடவடிக்கை- கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தகவல்

Published On 2020-10-17 12:17 GMT   |   Update On 2020-10-17 12:17 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்தை முற்றிலுமாக ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடுதல் டி.ஜி.பி.ராஜேஷ்தாஸ் கூறினார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தமிழக கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) ராஜேஷ் தாஸ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சக்திவேல், ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மைலான் நிறுவன மனித வள மேம்பாட்டு துறை அதிகாரி பழனிகுமார், துணை தலைவர் ரவிக்குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி.ராஜேஷ்தாஸ் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரவுடிகள், கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் காவல் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் குறைகளை அவர்களின் இடத்திற்கே சென்று விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் லாட்டரி, கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை, மணல் கடத்தல், கள்ளச்சாராயம், உரிமம் பெறாமல் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள், சட்டத்திற்கு புறம்பான வெடி பொருட்கள் வைத்திருப்பவர்கள் குறித்து காவல் துறையினர் தணிக்கை செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மின் விசிறி, குடிநீர், கழிப்பறை ஆகிய அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை கூடுதல் டி.ஜி.பி. திறந்து வைத்தார்.
Tags:    

Similar News