உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-01-13 09:42 GMT   |   Update On 2022-01-13 09:42 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணை வேளாண்மை எந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி, வேளாண் எந்திரங்கள் பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். 

பின்னர் விண்ணப்பம் மத்திய அரசின் இணைய தளமான www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் எந்திரங்கள், கருவிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.

நடப்பு ஆண்டில் முதல் தவணையாக ரூ.20 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் 30 எந்திரங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் விவரங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும். விவசாயிகள் எந்திர கருவியை தேர்வு செய்தால் அவர்கள் 1, 2, 3 என எண் இடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.ஏற்கனவே கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படாது. 

எனவே இந்த 2021-22 ஆண்டுக்கு புதியதாக பதிவு செய்ய வேண்டும்.ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது 2 வேளாண் எந்திரங்கள், கருவிகள் மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க முடியும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் வாங்க முடியும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பாலாறு அணைக்கட்டு ரோடு, வாலாஜா, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News