வழிபாடு
பெரிய மாரியம்மன் கோவிலில் விடிய விடிய கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றும் பெண்கள்

பெரிய மாரியம்மன் கோவிலில் விடிய விடிய கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றும் பெண்கள்

Published On 2022-03-30 08:54 GMT   |   Update On 2022-03-30 08:54 GMT
பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கோவில்களில் நடப்பட்டு உள்ள கம்பத்துக்கு ஊற்றி அம்மனை வழிபடுகிறார்கள்.
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா தற்போது நடந்து வருகிறது.

விழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கோவில்களில் நடப்பட்டு உள்ள கம்பத்துக்கு ஊற்றி அம்மனை வழிபடுகிறார்கள். பெரிய மாரியம்மன் கோவிலில் நள்ளிரவிலும் பெண்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுகின்றனர். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விடிய, விடிய பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றுவதை காணலாம். விழாவையொட்டி பக்தர்கள் பலர் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடனும் செலுத்தி வருகின்றனர். இதில் பறவை காவடி, முதுகில் அலகு குத்தி வாகனம், தேங்காய்கள் போன்றவற்றை இழுத்து வந்தும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு பக்தர்களுக்கு தினமும் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற பிரசாதமும் வழங்கப்படுகிறது. மேலும் வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்களும் அம்மனை வணங்கியபடி செல்வதை காணமுடிகிறது. புதிதாக மோட்டார்சைக்கிள் வாங்கியவர்கள் அம்மன் கோவில் அருகே வண்டியை நிறுத்தி பூஜை செய்து வழிபட்ட பிறகே வண்டியை எடுத்துச்செல்கிறார்கள்.
Tags:    

Similar News