செய்திகள்
தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் - நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பேட்டி
தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடலூர்:
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா டி.வேலூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், அங்குள்ள அரசியல் கட்சியினர் நாங்கள் தான் பொருட்களை கொடுப்போம் என்று கூறி தகராறு செய்து வருகின்றனர். ஆளுங்கட்சியை சேர்ந்த அவர்கள் 2 கோஷ்டிகளாக உள்ளனர்.
இதில் யார் ரேஷன் கடையில் பொருட்களை கொடுப்பது என தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒன்றிய கவுன்சிலர், மாற்றுத்திறனாளியான ரேஷன் கடை பணியாளர் சுரேசை தாக்கியுள்ளார். அரசியல் கட்சியினர் நிர்வாகத்தின் மூலம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர, நிர்வாகத்தை தாங்களே கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவது நாகரிகமான செயல் அல்ல.
மேலும் ரேஷன் கடை பணியாளரை தாக்கியவரை உடனே கைது செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அரசியல் கட்சி பிரமுகர்கள் இவ்வாறு தவறு செய்வதை முதல்-அமைச்சர் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில தலைவர் சரவணன் உடனிருந்தார்.