செய்திகள்
ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி
தடுப்பூசிகள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பரவலையடுத்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி போட செய்வதை முதல் பணியாக கருதுகின்றனர். ஆனால் தடுப்பூசி மருந்து இல்லை.
கடந்த 14-ந்தேதி வரை பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் திருப்பூரில் இயங்கி வந்தன. தற்போது, நிறுவனங்கள் செயல்படாத நிலையில், தடுப்பூசி போட வேண்டுமெனில் தொழிலாளரை ஒருங்கிணைப்பது சற்று சிரமமானதாக இருக்கும்.
இதுகுறித்து பின்னலாடை தொழில் துறையினர் கூறுகையில், தடுப்பூசி இலக்கை அடைவதற்கு ஏற்ப தடுப்பூசி மருந்தை அளிக்க மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்திற்கான ஒதுக்கீட்டை பெற தீவிரம் காட்ட வேண்டும்.
தடுப்பூசியில் எவ்வளவு பின்தங்குகிறோமோ? அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்தும் அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும். தடுப்பூசி மருந்து கிடைத்தால் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி உடனடியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட முடியும். மேலும் தொழிலாளர் குடும்பத்தினருக்கும் செலுத்துவது அவசியம். போர்க்கால வேகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயம் என்றனர்.