செய்திகள்
கோவில் மூடப்பட்டதை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ஏழைப் பிள்ளையார் கோவில் வாய்க்கால் சீரமைப்பு பணிகளின்போது மண்ணால் மூடப்பட்டதை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி:
திருச்சி வரகனேரி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஏழைப் பிள்ளையார் கோவில் வாய்க்கால் சீரமைப்பு பணிகளின்போது மண்ணால் மூடப்பட்டது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் அந்த பகுதியில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அறிவிப்பு பலகை வைத்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாரதீய ஜனதா கட்சியின் பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் காந்தி மார்க்கெட் போலீசார் அங்கு வந்து அவர்களை அழைத்து சென்றனர். இது சம்பந்தமாக இன்று(புதன்கிழமை) கள ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என போலீசார் அளித்த உறுதியை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.