செய்திகள்
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள காட்சி.

அமராவதி, திருமூர்த்தி, உப்பாறு-திருப்பூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் அணைகள்

Published On 2021-11-27 09:16 GMT   |   Update On 2021-11-27 09:16 GMT
உடுமலை திருமூர்த்தி அணை 24 ஆண்டுக்குப்பின் நிரம்பும் வாய்ப்புள்ளதால் பாலாற்றின் வழியோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை தென்மேற்கு பருவ மழையால் கடந்த ஜூலை  மாதம் 23-ந்தேதி நிரம்பி 3 மாதம் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழையால் கடந்த 3-ந் தேதி  இரண்டாவது முறையாக அணை நிரம்பியது.

அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் குறைந்த மழையால்  உபரி நீர் திறப்பும் குறைந்து நேற்றுமுன்தினம் காலை வினாடிக்கு 988 கனஅடி  நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் நேற்று முன்தினம் மொத்தம் 90 அடி கொண்ட அணை நீர்மட்டம் 88 அடியாக உயர்ந்ததோடு நீர்வரத்தும் திடீரென உயர்ந்தது. இதனால் அணை பாதுகாப்பு கருதி அணையின் பிரதான மதகுகள் வழியாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

தற்போது 5,380 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள அமராவதி ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மேலும் உடுமலை திருமூர்த்தி அணை 24 ஆண்டுக்குப்பின் நிரம்பும் வாய்ப்புள்ளதால் பாலாற்றின் வழியோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ( பி.ஏ.பி., ) தொகுப்பு அணைகளில் ஒன்றான உடுமலை திருமூர்த்தி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து மொத்தமுள்ள 60 அடியில் 55.73 அடி நீர்மட்டமாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1,387 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து பி.ஏ.பி., 4ம் மண்டல பாசன நிலங்களுக்கு பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 783 கன அடி நீர், தளி கால்வாய், குடிநீர் என  910 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருமூர்த்திமலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக எந்நேரமும் அணை நிரம்பும் வாய்ப்புள்ளதால் பாலாற்றின் வழியோர கிராமங்களுக்கும், கேரளா மாநிலம், சித்தூர், ஒலவக்கோடு உள்ளிட்ட வழியோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணை கடந்த 1997 டிசம்பர் 8-ந்தேதி நிரம்பியது. அதற்கு பின் 24 ஆண்டாக நிரம்பவில்லை. கடந்த 5-ந்தேதி நிரம்பும் நிலை ஏற்பட்டதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால்  நீர்வரத்து குறைந்ததால் திறக்கவில்லை. தற்போது நிரம்பும் வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள மழை நீர் ஓடைகளில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உப்பாறு அணையை தண்ணீர் எட்டியுள்ளதால் 16 ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பும் நிலை ஏற்பட்டு விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



பி.ஏ.பி., பாசனத்தின் கசிவு நீர் அணை திட்டமாகவும், உடுமலை, பல்லடம் பகுதிகளில் பெய்யும் மழை நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படும் வகையிலும் 1968ல் உப்பாறு ஓடையின் குறுக்கே 1,100 ஏக்கர் பரப்பளவில் 2,256 மீட்டர் நீளத்தில் 572 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவுடன் உப்பாறு அணை கட்டப்பட்டது. 

அணை வாயிலாக இடது கால்வாய் பாசனத்தில் 3,550 ஏக்கர்,வலது கால்வாய் பாசனத்தில் 2,510 ஏக்கர் என  6,060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. பாசனம் மட்டுமின்றி  சுற்றுப்புறத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

பருவ மழை குறைவு, பி.ஏ.பி., பாசன திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களினால் நீர்வரத்து குறைந்த அணையாகவும் வறட்சி பகுதியாகவும் மாறியது. ஆண்டுதோறும் குறைந்த அளவு நீர் மட்டுமே கிடைத்து வந்தது.

உப்பாறு அணை கடந்த 2005ல் நிரம்பியது. அதற்கு பின் வறண்டு காணப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டு வட கிழக்கு பருவமழையால் 16 ஆண்டுக்கு பின் நிரம்பும் வாய்ப்புள்ளது. உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் உப்பாறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து அரசூர் ஷட்டர் வழியாக திறக்கப்பட்ட நீர் மற்றும் 7 குளங்கள் நிரம்பி ராஜவாய்க்கால் வழியாக செல்லும் நீர் என பல ஆண்டுகளுக்கு பின் பெரிய அளவிலான நீர் வழிப்பாதையை கொண்ட உப்பாறு மற்றும் கிளை ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  அணை வேகமாக நிரம்பியது.

தற்போது மொத்தமுள்ள 24 அடியில்  22.25 அடி நீர் இருப்பு உள்ளது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு  1,000 கன அடியாக உள்ளது. அணை நிரம்ப 2 அடி மட்டுமே உள்ள நிலையில்  உப்பாற்றின் கரையோரத்திலுள்ள உடுமலை, தாராபுரம் தாலுகா மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உப்பாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீர் அமராவதி ஆற்றில் கலக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை 24 மணி நேரமும் அதிகாரிகள்  கண்காணித்து வருகின்றனர். மேலும் அமராவதி கரையோர பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News