ஆன்மிகம்
கற்பனைக்கும் எட்டாத கயிலாசநாதர் கோவில்

கற்பனைக்கும் எட்டாத கயிலாசநாதர் கோவில்

Published On 2021-11-05 05:35 GMT   |   Update On 2021-11-05 05:35 GMT
இந்தக் கோவில், கி.பி.7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கட்டி முடிக்க சுமார் 100 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.
குடைவரைக் கோவில்களுக்கு புகழ்பெற்றவை, எல்லோராவில் உள்ள குகைக்கோவில்கள். இது யுனெஸ்கோ சான்று பெற்றது. இங்கு மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் பவுத்தம், இந்து, சமணம் ஆகியவற்றுக்கான குடைவரைகள் அமைந்துள்ளன. இவை ஒரே நேரத்தில் வழிபாட்டிலும் இருந்துள்ளன.

எல்லோராவில் ஒரே இடத்தில் 34 குடைவரைக் கோவில்கள் அமைந்துள்ளன. இதில் 1 முதல் 12 வரை பவுத்த கோவில்கள், 13 முதல் 29 வரை இந்து கோவில்கள், மீதமுள்ள ஐந்தும் சமணத்திற்கு உரியவை.

இதில் 16-ம் எண் கொண்ட குடைவரைக் கோவிலாக அமைந்ததுதான், கயிலாசநாதர் திருக்கோவில்.

இந்தக் கோவில், கி.பி.7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கட்டி முடிக்க சுமார் 100 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.

சிவபெருமான் வீற்றிருப்பதாக சொல்லப்படும் கயிலாய மலையைப் போன்ற அமைப்பில், இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான் பார்வதி மற்றும் நந்தி, பூதகணங்களோடு கயிலையில் வீற்றிருந்தபோது, ராவணன் அந்த மலையை பெயர்த்தெடுக்க முயன்ற புராணக்கதை ஒன்று உண்டு. அந்தக் காட்சி இங்கே தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.

கருவறையில் கயிலாசநாதர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

நந்தி மண்டபம், விமானம், இரண்டு கோபுரங்கள், இரண்டு அழகிய கல் தூண்கள் என்ற அமைப்பில் உள்ளஆலயத்தின் அடிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள யானைகள், ஆலயத்தையே தாங்குவது போல் காட்சி தருகின்றன.

காண்பவர்களைக் கவரும் வகையிலான இந்த சிற்பக்கலைக்கூடம், மகாராஷ்டிரா மாநிலம் எல்லோராவில் இருக்கிறது. அவுரங்கபாத் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டரில் இந்த இடத்தை அடையலாம்.

* இது ஒற்றைக்கல் ஆலயமாகும். மலையைக் குடைந்து, தேவையற்ற கற்களை நீக்கி மட்டுமே உருவாக்கப்பட்டது. மொத்த ஆலயமும் 85 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள ஒரே பாறையில் வடிக்கப்பட்டிருக்கிறது.

* 148 அடி நீளம், 62 அடி அகலம், 100 அடி உயரம் கொண்ட பிரம்மிப்பூட்டும் இந்தக் கோவில், மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக செதுக்கப்பட்டிருக்கிறது.

* கோவில் முழு வடிவம் பெறுவதற்காக வெட்டி நீக்கப்பட்ட பாறைகள் மட்டும் சுமார் 4 லட்சம் டன் எடை இருக்கும் என்கிறார்கள்.

Tags:    

Similar News