செய்திகள்
தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகலாவை சந்தித்த தலைவர்கள்
சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சென்னை:
சசிகலா சென்னை திரும்பிய பிறகு முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா, அமீர், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளதாக சசிகலா கூறி உள்ளார். ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் முக்கிய தலைவர்கள் சசிகலாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.