வழிபாடு
மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலயத்தில் அசன விழா நடந்தபோது எடுத்த படம்.

மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசன விழா: திரளானவர்கள் பங்கேற்பு

Published On 2022-02-18 04:13 GMT   |   Update On 2022-02-18 04:13 GMT
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கனம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனை நடந்தது.
மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய 175-வது பிரதிஷ்டை மற்றும் அசன விழா கடந்த 8-ந்தேதி ஐ.எம்.எஸ். கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி, நற்செய்தி கூட்டங்கள், திடப்படுத்தல் ஆராதனை, பாகவதர் கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியாரின் பஜனை பிரசங்கம், ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது.

நேற்று முன்தினம் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கனம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனை நடந்தது.

தொடர்ந்து அசன வைபவ மங்களகால் நடப்பட்டது. மாலையில் பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை, ஆயத்த பண்டிகை ஆராதனையை கன்னியாகுமரி திருமண்டல பேராயர் செல்லையா நடத்தினார். தொடர்ந்து ஆலய 175-வது ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார்.

விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடந்தது. நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் தேவ செய்தி வழங்கினார். காலையில் ஜான் தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அசனத்துக்கு உலை ஏற்றப்பட்டது. மதியம் 3 மணியளவில் அசன விழா தொடங்கியது.

பின்னர் நள்ளிரவு வரையிலும் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு அசன உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது.

விழா ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் பொது மகமை சங்க தலைவர் ஜெயபோஸ், துணை தலைவர் ஜெரால்டு ஜான்சன், செயலாளர் நவமணி ராபர்ட், இணை செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், தலைமை குருவானவர் கோல்டுவின், உதவி குருவானவர் ஐசக்துரை ஜோயல், திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ் மற்றும் சபை மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News