செய்திகள்
அமலாக்கத்துறை

ப.சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

Published On 2019-10-17 09:46 GMT   |   Update On 2019-10-17 09:46 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் உதவியாளர் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திடம் உதவியாளராக இருந்தவர் கே.வி.பெருமாள்.

இவர் மிக நீண்ட ஆண்டுகளாக சிதம்பரத்திடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். ப.சிதம்பரத்தின் அனைத்துவித செயல்பாடுகளும் இவருக்கு நன்கு தெரியும்.

சி.பி.ஐ. அதிகாரிகள் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கை விசாரிக்க தொடங்கியதும் பெருமாளிடமும் விசாரணை நடத்தினார்கள். டெல்லியில் வசித்து வரும் அவருக்கு பல தடவை சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரித்தனர்.

ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் ஐ.என்.எக்ஸ். மீடியா மூலம் பணபரிமாற்றம் செய்தது தொடர்பாக பெருமாளிடம் ஏராளமான கேள்விகளை கேட்டனர். அதன் பிறகு அவரை விடுவித்து விட்டனர்.

இந்த நிலையில் ப.சிதம்பரம் முறைகேடு செய்ததாக சில புதிய ஆதாரங்களை அமலாக்கத்துறை சேகரித்துள்ளது. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் ப.சிதம்பரத்திடம் மட்டுமின்றி அவருக்கு நெருக்கமானவர்களிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ப.சிதம்பரத்திடம் உதவியாளராக இருந்த பெருமாளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அடுத்த கட்ட விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News