செய்திகள்
தினேஷ் கார்த்திக்

சையத் முஷ்டாக் அலி டிராபி - ராஜஸ்தானை வீழ்த்தியது தமிழ்நாடு

Published On 2019-11-09 10:05 GMT   |   Update On 2019-11-09 10:05 GMT
இந்தியாவின் முன்னணி உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழ்நாடு.
திருவனந்தபுரம்:

முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தனர். ஜெகதீசன் 34 ரன்னிலும், முரளி விஜய் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
அதன்பின் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 48 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விஜய் சங்கர் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

அதைத்தொடர்ந்து, 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. சாய் கிஷோர் 3 விக்கெட்டும், நடராஜன், பெரியசாமி, விஜய் சங்கர், முருகன் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டு வீழ்த்தினர். இதனால் ராஜஸ்தான் அணியால் 116 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தமிழ்நாடு 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
Tags:    

Similar News