செய்திகள்
சசிகலா

சசிகலா நாளை விடுதலை ஆகிறார் - தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு

Published On 2021-01-25 20:37 GMT   |   Update On 2021-01-25 20:37 GMT
விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை (புதன்கிழமை) விடுதலையாக உள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை சுப்ரீம் கோர்ட்டால் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவின் தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. ஆனால் அவர் ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை கழித்துவிட்டு பார்த்தால், அவர் ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து சசிகலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தொகையை பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார்.



விடுதலையாக ஒரு வாரம் இருந்த நிலையில் அவருக்கு கடந்த 20-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவற்றால் அவதிப்பட்ட அவரை பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறை நிர்வாகம் அனுமதித்தது. அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் கலாசிபாளையா பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவரது நுரையீரலில் தீவிர தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைப்பு வழங்கியதை அடுத்து, அவருக்கு ஏற்பட்டிருந்த நுரையீரல் பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது.

தற்போதைய நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை கட்டுக்குள் உள்ளன. இதுகுறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. அவர் சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார். அவரது இதய துடிப்பு நிமிடத்திற்கு 74, ரத்த அழுத்தம் 130/80 என்ற அளவில் உள்ளது. சுவாசம் நிமிடத்திற்கு 19 என்ற அளவில் இருக்கிறது. அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் 98 என்ற அளவில் உள்ளது. அவருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

சர்க்கரை அளவு 205 ஆக இருக்கிறது. அவருக்கு இன்சூலின் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக நீங்கியது. இருப்பினும் கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு சசிகலா நன்றாக ஒத்துழைக்கிறார். அவராகவே எழுந்து உட்காருகிறார். உதவியாளரின் உதவியுடன் நடக்கிறார். உடல் உறுப்புகள் இயல்பான நிலையில் செயலாற்றுகின்றன. உணவுகளை உட்கொள்கிறார். அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சசிகலாதிட்டமிட்டப்படி 27-ந் தேதி (அதாவது நாளை) விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் இருந்தபடியே விடுதலை செய்யப்படுகிறார். அங்கு ஆவணங்களில் சிறைத்துறை அதிகாரிகள் கையெழுத்து பெற்று நடைமுறைகளை முடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

27-ந் தேதிக்கு பிறகும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவாரா? அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவாரா? என்பது குறித்து அவரது குடும்பத்தினர் முடிவு செய்வார்கள். ஆனால் அவர் தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு சசிகலா பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தான் தமிழகம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவருக்கு சென்னை செல்லும் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க அ.ம.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.

சசிகலா உடல்நலம் தேறி வருவதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்டோரியா மருத்துவமனைக்கு முன் பகுதியில் உள்ள கோவிலில் சசிகலா விரைவாக குணம் அடைய வேண்டி ஆதரவாளர்கள் சிறப்பு பூஜை செய்தனர். அதே போல் இளவரசியின் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது. அவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு

சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. அவரது நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று பாதிப்பும குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டது. இன்னமும் அவரை தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவரை சாதாரண வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதியானால், அவரை டிஸ்சார்ஜ் செய்யவும் டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் 2 வாரம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துவார்கள். அதனால் அவர் சென்னைக்கு சென்றாலும், 10 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வார் என்று கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக அவரை யாரும் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றே சொல்லப்படுகிறது.
Tags:    

Similar News