பல்லாவரம் பகுதியில் வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை குறிவைத்து கொள்ளையடித்த ஆந்திரா கும்பல் கைது
தாம்பரம்:
பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சையத் தவுலத்(78). இவர் கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.60 ஆயிரம் எடுத்து வந்தபோது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.
இதனை தனிப்படை போலீசார் கண்காணித்த போது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மாங்காட்டில் இருந்த கூட்டாளிகள் 6 பேரும் சிக்கினர்.
விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பாபு, ரமேஷ், சுரேஷ், முரளி, கிருஷ்ணன், பாபு, கார்த்திக் ஆகியோர் என்பதும் பல்லாவரம், சங்கர்நகர், மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து வருபவர்களை நோட்ட மிட்டு கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம், 4 மோட்டார் சைக்கிள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.