செய்திகள்
வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது -ஜனாதிபதியிடம் முறையிட 12 எதிர்க்கட்சிகள் முயற்சி
வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றியது தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து பேச 12 எதிர்க்கட்சிகள் நேரம் கேட்டுள்ளன.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. 3 வேளாண் மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவைக்கு வந்தன. இதில் 2 மசோதாக்கள் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன. அமளியில் ஈடுபட்டது தொடர்பாக 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் தங்கள் முயற்சி தோல்வியில் முடிந்ததால், வேளாண் மசோதாக்களை நிறுத்தி வைக்க அடுத்தகட்ட முயற்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட உள்ளனர்.
இதுபற்றி காங்கிரஸ் எம்பி சக்திசின் கோகில் கூறுகையில், ‘வாக்கெடுப்பு நடத்தாமல் வேளாண் மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றியது தொடர்பாக பேசுவதற்காக 12 கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என 12 கட்சிகளும் வலியுறுத்த உள்ளோம்’ என்றார்.