செய்திகள்
வேதாரண்யத்தில் இன்று காலை சூறைகாற்றுடன் கனமழை
வேதாரண்யத்தில் சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் இதமான சூழல் நிலவியது. 40.2 மி.மீ. மழை அளவு பதிவானது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. இரவு வரை வெப்பத்தின் தாக்கம் இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் சூறை காற்றாக மாறி மழை பெய்ய தொடங்கியது.. நேரம் செல்ல செல்ல இடியுடன் கனமழையாக மாறியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் இதமான சூழல் நிலவியது. 40.2 மி.மீ. மழை அளவு பதிவானது.
இந்த மழை வேதாரண்யம் நகரில் மட்டுமே கருணை காட்டியது. புறநகர் பகுதிகளில் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.