லைஃப்ஸ்டைல்
கர்ப்பிணிகளுக்கு முதுகுவலி ஏன் வருகிறது

கர்ப்பிணிகளுக்கு முதுகுவலி ஏன் வருகிறது..? அதை தடுக்கும் வழிமுறைகள்

Published On 2019-10-10 06:32 GMT   |   Update On 2019-10-10 06:32 GMT
வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் தொடங்கி வீட்டில் இருக்கும் கர்ப்பிணிகள் வரை முதுகுவலியால் பெரும் அவஸ்தையை அனுபவிகிக்கின்றனர்.
கர்ப்ப காலத்தில் பல உடல் மாற்றங்கள், உபாதைகள் என தினம் தினம் போராட்டம்தான். அதில் ஒன்றுதான் ’முதுகு வலி’. வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் தொடங்கி வீட்டில் இருக்கும் கர்ப்பிணிகள் வரை முதுகுவலியால் பெரும் அவஸ்தையை அனுபவிகிக்கின்றனர்.

கர்ப்ப காலத்தின் மூன்று அல்லது நான்காம் மாதத்திலிருந்தே தொடங்கும் இந்த முதுகு வலி கடைசி ஒன்பது மாதத்தோடு நின்றுவிடுவதில்லை குழந்தை பிறந்த பின்பும் தொடர்கிறது என்பதுதான் தலையாயப் பிரச்சனை.

”கர்ப்பகாலத்தில் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்கள் சுரக்கும். இதை ஆங்கிலத்தில் ’Pregnancy hormones'என்று அழைப்பார்கள். இது மூட்டுகள் மற்றும் தசைநார்களை தளர்த்துவது மட்டுமன்றி, இடுப்புப் பகுதியின் தசைகளையும் தளர்த்தும். இதனால் உடல் கூடுதல் எடையைத் தாங்குவதற்கு சிரமப்படும். இதனால்தான் முதுகுவலி ஏற்படுகிறது”.

முதுகு வலி என்பது எல்லா பெண்களுக்கும் வராது. கர்ப்பமடைவதற்கு முன்பே அவர்களுடைய முதுகுத் தண்டு எலும்புகளின் வலிமை குறைவாக இருந்தாலும், முதுகுவலி இருந்திருந்தாலும் எடை கூடும்போது வலி அதிகமாக இருக்கும் எனக் கூறும் மருத்துவர், பிரசவத்திற்குப் பின் வரும் முதுகுவலிக்கும் இதுதான் காரணம் என்கிறார்.

”கர்ப்பகாலத்தில் மாதங்கள் அதிகரிக்க அதிகரிக்க குழந்தையின் வளர்ச்சி, எடை அதிகரிக்கும். குழந்தை வளர்வதற்கு ஏதுவாக பெண்களின் கர்ப்பப்பை, தசை நார்கள், எலும்புகள் விரிவடையும். உதவியாக பின் முதுகு தானாக வளைந்து கொடுக்கும். அப்படி வளையும் போது எலும்புகளுக்குக் கிடைக்கும் அழுத்தத்தால் வலி ஏற்படும். எலும்புகளின் வலிமைகுறைவாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும்.

அது உறுதியாக இருக்கும்பட்சத்தில் முதுகு வலி இருக்காது. இந்த முதுகுவலிப் பிரச்னை இன்று பல பெண்களுக்கு இருக்கிறது. இதற்காகத்தான் பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் அதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு இந்த முதுவலியே சாட்சி”.

”அதேபோல் பிரசவத்திற்குப் பின்னும் பெண்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுவதை அறுவை சிகிச்சையின்போது போடப்படும் ஊசிகளால்தான் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். அது முற்றிலும் தவறு. கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட அந்த முதுகு வலியின் தொடர்ச்சிதான் பிரசவத்திற்குப் பிறகு வரும் முதுகுவலிக்கும் காரணம்”.

இந்த பெரும் காரணங்களைத் தவிர்த்து நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது, அதிக வேலைகள் செய்வது, நீண்ட தூரம் நடப்பது போன்ற உடல் உழைப்புகளை அதிகமாக செய்யும்போதும் முதுகுவலியை அதிகப்படுத்தும்.

இதுதவிர வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் பலரும் முதுகுவலியால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் கட்டாயம் மணிக்கு ஒரு முறை 10 நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் இலகுவாகும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

”வேலை செய்யும் இடத்தில் நாற்காலி வயிற்றுக்கு உறுதுணையளிக்கும் விதமாக இருக்க வேண்டும். முதுகுக்கு குஷன் பேடுகளை வைத்துக்கொள்ள வேண்டும். கணினியானது நிமிர்ந்து அல்லது எட்டிப் பார்ப்பதுபோல் இருக்கக் கூடாது. அவ்வாறு நிமிர்வதாலும் வலி ஏற்படும்.

தீராத முதுகுவலியை குறைக்க என்னென்ன வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்....

வெதுவெதுப்பான தண்ணீர் கொண்ட ஹீட் பேடைக் கொண்டு முதுகில் ஒத்தடம் தரலாம்.

வீட்டில் இருக்கும் பெண்கள் அமரும்போது முதுகுக்கு பிடிமானம் தரும் குஷன் பேடுகளை வைத்துக்கொள்ளலாம். வயிற்றுக்கும், முதுகுக்கும் பக்கபலமாக இருக்கும் கர்ப்பகால தலையணைகளை உறங்குவதற்குப் பயன்படுத்தலாம்.

எடை தூக்குதலைத் தவிருங்கள். அணியும் காலணிகளிலும் கவனமாக இருக்க வேண்டும். ஹீல் இல்லாமல் பாதங்களுக்கு இதமான ஷூ, சமதளத்தில் இருக்கும் காலணிகளை அணியலாம்.

இரத்தப்போக்கு, கர்ப்பப்பை உறுதியின்மை போன்ற கர்ப்பகால பிரச்னைகள் இல்லாதபட்சத்தில் பிசியோதெரப்பியின் அறிவுரைப்படி உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.
Tags:    

Similar News