செய்திகள்
விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா?- ராஜ்கோட்டில் நாளை 2வது போட்டி

Published On 2020-01-16 10:30 GMT   |   Update On 2020-01-16 10:30 GMT
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (17-ந்தேதி) நடக்கிறது.

ராஜ்கோட்:

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (17-ந்தேதி) நடக்கிறது.

முதல் ஆட்டத்தில் தோற்றதால் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாளைய போட்டியிலும் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்.

மும்பை போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மிகவும் கவலையளிக்கும் வகையில் மோசமாக இருந்தது.

கேப்டன் வீராட்கோலி 4-வது வரிசையில் பின்தங்கி களம் இறங்கியது எந்தவித பலனையும் தரவில்லை. பேட்டிங் வரிசையில் செய்த மாற்றம் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் கோலி எப்போதும் விளையாடும் 3-வது வரிசையிலேயே ஆடுவார் என்று தெரிகிறது.

ரோகித் சர்மாவும், தவானும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். ராகுல் 4-வது வீரராக களம் இறங்கலாம். ரி‌ஷப் பண்ட் ஆட மாட்டார் என்பதால் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார். முதல் ஆட்டத்திலும் அவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார்.

முதல் போட்டியில் பேட்டிங் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்யப்படும். ரி‌ஷப் பண்ட் இடத்தில் கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டேதேர்வு செய்யப்படுவர். இதேபோல ஜடேஜா நீக்கப்பட்டால் ஷிவம் துபேக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முன்னனி பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். ரோகித் சர்மா, கோலி , ஷிரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆட வேண்டியது அவசியமாகும்.

தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஒரு விக்கெட்டை கூட பந்துவீச்சாளர்கள் கைப்பற்ற முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே. ஆரோன் பிஞ்ச், வார்னர் அதிரடியாக ஆடி இந்திய பந்துவீச்சை சிதறடித்து விட்டனர்.

3 வேகப்பந்து வீரர்களும் (முகமது ‌ஷமி, பும்ரா, ‌ஷர்துல் தாகூர்) ரன்களை வாரி கொடுத்தனர். இதனால் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரர் தேவைப்பட்டால் சாஹல் இடம் பெறலாம்.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. முதல் போட்டியைப் போலவே நாளைய ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

கேப்டன் ஆரோன் பிஞ்ச், வார்னர் மும்பையில் சதம் அடித்து முத்திரை பதித்தனர். இதே போல முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித், லபுஷ்சேன், அலெக்ஸ் கேரி, டர்னர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

வேகப்பந்து வீரர்களான ஸ்டார்க், கும்மின்ஸ், ரிச்சர்ட்சன் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். இதேப்போல சுழற்பந்தில் ஆடம் ‌ ஜம்பா, ஆஸ்டன் அகர் நேர்த்தியாக வீசக் கூடியவர்கள்.

இரு அணிகளும் நாளை மோதுவது 139-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 138 ஆட்டத்தில் இந்தியா 50-ல், ஆஸ்திரேலியா 78-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டி முடிவு இல்லை.

மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா; வீராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ஜடேஜா, ஷிவம் துபே , குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், முகமது ‌ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, மனிஷ் பாண்டே.

ஆஸ்திரேலியா; ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் சுமித், மார்ன்ஸ் லபுஷ்சேன், ஹேண்ட்ஸ் ஹோம், அலெக்ஸ் கேரி, ஆஸ்டன் டர்னர், ஸ்டார்க், கும்மின்ஸ், ஹாசல்வுட், கானே ரிச்சர்ட்சன், ஆஸ்டன் அகர், ஆடம் ஜம்பா, ஆர்சி ஷார்ட்.

Tags:    

Similar News