ஆட்டோமொபைல்
இந்தியாவில் விற்றுத்தீர்ந்த சுசுகி ஹயபுசா
சுசுகி நிறுவனத்தின் ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் விற்றுத் தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
சுசுகி நிறுவனத்தின் ஹயபுசா மோட்டார்சைக்கிள் சீரிஸ் உலகம் முழுக்க பிரபலமாக இருக்கின்றன. மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் முதல் மோட்டார்சைக்கிள் மாடலாக இது இருக்கிறது. இந்தியாவில் 2004-ம் ஆண்டு வெளியான தூம் திரைப்படத்தில் இந்த மோட்டார்சைக்கிள் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சுசுகி ஹயபுசா பி.எஸ்.4 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பி.எஸ்.6 ஹயபுசா மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹயபுசா எனும் பெயர் ஜப்பானில் உள்ள பெரிகிரைன் ஃபால்கன் எனும் பறவையை குறிப்பிடும் வகையில் தேர்வு செய்யப்பட்டது. இந்த பறவை தனக்கான இரையை வேட்டையாடும் போது மணிக்கு அதிகபட்சமாக 320 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். இதே போன்ற வேகத்தை ஹயபுசா மாடலும் எட்டிவிடும்.
இதில் 1340சிசி லி்க்விட் கூல்டு, இன்-லைன், 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 197 பி.ஹெச்.பி. @ 9500 ஆர்.பி.எம்., 155 என்.எம். டார்க் @ 7200 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் சுசுகி ஹயபுசா மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.74 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
இது மணிக்கு அதிகபட்சமாக 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருந்தாலும், இந்தியாவில் இதன் வேகம் மணிக்கு 299 கிலோமீட்டர்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் டிசம்பர் 2019 இல் சுசுகி நிறுவனம் ஹயபுசா மோட்டார்சைக்கிளின் பி.எஸ்.4 மாடலை குறைந்த எண்ணிக்கையிலேயே கொண்டு வந்தது.
இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் புதிய நிறங்கள், புதிய முன்புற பிரேக் கேலிப்பர்களுடன் கொண்டுவரப்பட்டது. இவை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கடைசி யூனிட்களாகும். ஐரோப்பிய விதிகளுக்கு பொருந்தாத காரணத்தால் இவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.