ஆன்மிகம்
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

Published On 2021-03-22 08:54 GMT   |   Update On 2021-03-22 08:54 GMT
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் தீர்த்வாரி நிகழ்ச்சி நடந்தது. அத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, மாலை இரு வேளை பல்வேறு வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 7.30 மணியளவில் உற்சவர்களான சீதா, கோதண்டராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

இதையடுத்து சக்கரத்தாழ்வார் தீர்த்வாரி நிகழ்ச்சி நடந்தது. அதற்காக, கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த புனிதநீரில் சக்கரத்தாழ்வாரை மூன்று முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர். பின்னர் உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

விழாவில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் சிறப்பு நிலைய துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்காராஜு, கோவில் கண்காணிப்பாளர் ரமேஷ், கோவில் ஆய்வாளர்கள் முனிரத்தினம், ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணியில் இருந்து இரவு 9.30 மணிவரை பிரம்மோற்சவ விழா கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. அத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
Tags:    

Similar News