மதுரையில் அரிவாள், வாளுடன் 3 பேர் கைது
மதுரை:
மதுரையில் சில நாட்களாக ரவுடிகள் வேட்டை நீடித்து வருகிறது. திருநகர் போலீசார் நேற்று ஹார்வி பட்டி பூங்கா அருகில் ரோந்து சென்றனர். அங்கு 2 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டது. ஹார்விபட்டி ரோஜா நகரைச் சேர்ந்த கன்னிகா பரமேஸ்வரன் (வயது 25), சிவன் கோவில் தெரு மணிகண்டன் ( 24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அண்ணாநகர் போலீசார் வண்டியூர் சுடுகாட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 2 பேர் பதுங்கி இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். போலீசார் ஒருவரை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அவர் எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த அழகு மணி என்கிற அழுக்கு மணி (23) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து அரிவாள், வாள் பறிமுதல் செய்யப்பட்டன. அழுக்கு மணியை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய யாகப்பா நகர் வாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்த மாரிமுத்தை தேடி வருகின்றனர்.