செய்திகள்
மன்னார்குடியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் - ரூ.1 லட்சம் அபராதம்
மன்னார்குடியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
மன்னார்குடி:
கொரோனா தொற்றின் 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கை வருகிற 14-ந்தேதி வரை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கால் மருந்தகம் உள்ளிட்ட சில கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறி சில கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், நகராட்சி ஆணையர் கமலா, தாசில்தார் தெய்வநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் மன்னார்குடி கடைத்தெருக்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மேலராஜவீதி, பெரியகடைத்தெரு, கீழப்பாலம் ஆகிய பகுதிகளில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் அபராதம் வசூலித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.