தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல்.

பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல். இணைப்புக்கு மத்திய அரசு அனுமதி

Published On 2019-10-25 05:25 GMT   |   Update On 2019-10-25 05:25 GMT
பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் இணைப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.



இந்தியாவில் 4ஜி சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. அனுமதி அளிக்கப்பட்டது முதல் இந்தியா முழுக்க படிப்படியாக பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் தாமதம் நிலவுகிறது. இந்நிலையில், சரிவில் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மீட்கும் வகையில் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் இணைந்து செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரவை இரு நிறுவனங்களின் இணைப்புக்கு சில தினங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கியது.



பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.29,937 கோடி ஒதுக்கும். இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, இரு நிறுவனங்களும் இணைக்கப்படும். அப்படி இணைக்கப்படும்வரை, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் துணை நிறுவனமாக எம்.டி.என்.எல். செயல்படும்.

மறுசீரமைப்பு திட்டத்தின்படி, ரூ.15,000 கோடி மதிப்புக்கு தங்க பத்திரம் வெளியிட்டு பணம் திரட்டப்படும். ரூ.38,000 கோடி மதிப்புள்ள சொத்துகள், இன்னும் 4 ஆண்டுகளில் பணமாக்கப்படும். செலவை குறைப்பதற்காக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் முன்வைக்கப்படும். ஆனால், இரு நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது.

என மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
Tags:    

Similar News