செய்திகள்
தற்கொலை முயற்சி

சிறப்பு அதிரடிப்படை முகாமில் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

Published On 2021-09-21 10:20 GMT   |   Update On 2021-09-21 10:20 GMT
சிறப்பு அதிரடிப்படை முகாமில் தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர் ஜெகதீசனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கோவை:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 30). இவர் கோவை மாவட்ட சிறப்பு அதிரடிப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோவைக்கு மாற்றப்பட்டார். பின்னர் ஜெகதீசன் பில்லூர் டேமில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமில் தங்கி மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை பணியில் ஈடுபட்டு வந்தார். இவரும் மதுரையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். ஜெகதீசன் கோவைக்கு வந்ததால் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே செல்போனில் தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த இளம்பெண் போலீஸ்காரர் ஜெகதீசனுடன் பேசுவதையும் , பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் ஜெகதீசன் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

நேற்று மாலை பணி முடிந்து முகாமுக்கு திரும்பிய ஜெகதீசன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்றார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த சக போலீஸ்காரர்கள் உடனடியாக ஜெகதீசனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் போலீஸ்காரர் ஜெகதீசனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News