செய்திகள்
தர்மபுரியில் லேப் டெக்னீசியன் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தர்மபுரியில் லேப் டெக்னீசியன் வீட்டில் 8 பவுன் நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி அக்ரஹார தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 50). இவர் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டதால் செந்தில் இரவில் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளார். நேற்று காலை எழுந்த போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக செந்தில் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.