செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் - 300 பேர் கைது
மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு மற்றும் இந்துக்களின் மனதை புண்படுத்தி வரும் தி.மு.க. கூட்டணி கட்சிகளை கண்டித்தும் போலீசாரின் தடையை மீறி பா.ஜனதா கட்சியினர் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய வளாகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வடக்கு மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். கோட்ட அமைப்பு செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். நகர தலைவர் உமாசங்கர் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டபடி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொது செயலாளர்கள் செல்வராஜ், முருகேசன், மாவட்ட துணைத்தலைவர்கள் சத்தியமூர்த்தி, துரைசாமி, காரமடை நகர தலைவர் விக்னேஷ், மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் ரவி, மாவட்ட செயலாளர்கள் ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.