செய்திகள்
பள்ளிபாளையம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
பள்ளிபாளையம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட களியனூர் ஊராட்சி வெள்ளைப்பாறை புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). இவருடைய மனைவி ராஜம்மாள் (70). இவர் நேற்று மாலை 6 மணி அளவில் மழை பெய்து நின்று விட்ட சமயத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்து ஆடுகளை கொட்டகையில் கட்டுவதற்காக ஆடுகளை பிடிக்க சென்றார். அப்போது கொட்டகையின் அருகே உள்ள மின்கம்பத்தின் வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதை ராஜம்மாள் கவனிக்காமல் ஆடுகளை பிடிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின் வயரை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
இதற்கிடையே மூதாட்டியின் 3 ஆடுகளும் அடுத்தடுத்து மின் வயரை மிதித்ததில் 3 ஆடுகளும் மின்சாரம் தாக்கி கருகி செத்தன. மேலும் அந்த வழியாக வந்த ஒரு தெருநாயும் மின்வயரை மிதித்தது. இதில் நாய் மின்சாரம் தாக்கி செத்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பலியான மூதாட்டியின் பிணத்தை கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.