செய்திகள்
தற்கொலை செய்துகொண்ட கணேச மூர்த்தி உடலை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீட்டு செல்வதை படத்தில் காணலாம்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

Published On 2019-12-03 07:25 GMT   |   Update On 2019-12-03 07:25 GMT
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இன்று காலை 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி:

திருச்சி பாலக்கரை முடுக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் கணேச மூர்த்தி (வயது 34). இவர் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து திருச்சிக்கு வந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகாததால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 6 நாட்களாக 6-வது மாடியில் உள்ள அறையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்தநிலையில் இன்று காலை 7.30 மணிக்கு தந்தை நாகராஜூடன் கணேச மூர்த்தி பேசிக்கொண்டிருந்தார். பசி எடுப்பதாக மகன் கூறியதையடுத்து, அவரது தந்தை நாகராஜ் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள உணவகத்திற்கு டீ வாங்க சென்றார்.

அப்போது கணேசமூர்த்தி, திடீரென எழுந்து ஆஸ்பத்திரியின் மொட்டை மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்தார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கீழே விழுந்த கணேசமூர்த்தி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இன்று காலை 8 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கணேச மூர்த்தி ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்று தெரியவில்லை.

தற்கொலை செய்து கொண்ட கணேசமூர்த்தியின் தந்தை நாகராஜூக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். மனைவி மீராபாய், கணேசமூர்த்திக்கு 34 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் இருந்தார். தற்போது மகனை பறிகொடுத்த அவர் கதறித்துடித்தார்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் எப்போதும் மொட்டை மாடியின் கதவு பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கும். நோயாளிகளின் நலன் கருதியும், விபத்துக்களை தவிர்க்கவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் இதனை கடைபிடித்து வந்தது. ஆனால் கணேச மூர்த்தி மொட்டை மாடிக்கு சென்றபோது அதன் கதவுகள் திறந்த நிலையிலேயே இருந்துள்ளன.

இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களுக்காக இந்த கதவுகள் திறக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீரை திறப்பதற்காக ஆபரேட்டர் சென்ற நேரத்தில் கணேச மூர்த்தியும் பின்தொடர்ந்து சென்று அங்கிருந்து குதித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News