செய்திகள்
டெல்லி ஐகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா - வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
தலைநகர் டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 10,774 பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர்.
புதுடெல்லி:
டெல்லி ஐகோர்ட்டில் பணியாற்றும் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டனர்.
தலைநகர் டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 10,774 பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இது மாநிலம் அதுவரை காணாத அளவாகும்.
இவ்வாறு தீவிர தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் டெல்லி ஐகோர்ட்டிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அங்கு பணியாற்றும் 3 நீதிபதிகளுக்கு லேசான அறிகுறிகள் இருந்தன. எனவே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் அவர்கள் 3 பேரும் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நேற்று கோர்ட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவர்களது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக ஐகோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி ஐகோர்ட்டில் பணியாற்றும் மேலும் ஒரு நீதிபதிக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே அவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதன் முடிவுக்காக அவர் காத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.