மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மாணவ- மாணவிகள் திடீர் தர்ணா
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பட்டுப் புழுவியல்துறையில் இளநிலை அறிவியல் பட்டுப்புழு பட்டப் படிப்பில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பட்டுப்புழுவியல் துறை சேர்க்கப்படவில்லை என தெரிகிறது.
எனவே இந்த கல்வி ஆண்டில் பட்டுப்புழுவியல் துறையில் மாணவ- மாணவர்களை சேர்க்கக்கோரி பட்டுப்புழுவியல் துறை மாணவ, மாணவிகள் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் வேண்டும் வேண்டும் அட்மிஷன் வேண்டும். முடக்காதே முடக்காதே பட்டுப்புழுவியல் துறையை முடக்காதே என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் கல்லூரி முதல்வர் பார்த்திபன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.