குடிபோதையில் தகராறு- பூ வியாபாரியை அடித்து கொன்ற ஆட்டோ டிரைவர்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் அய்யனான் தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 80). பூ வியாபாரி.
இவர், கடந்த 30-ந் தேதி அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே மயங்கி கிடந்தார். இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன்(43), கணேசனின் மகன் சித்திரவேலுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சித்திரவேல் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கணேசனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரை உறவினர்கள், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
கணேசனின் உடலில் காயங்கள் இருந்ததால் அவருடைய சாவு குறித்து சித்திரவேல் மற்றும் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து சித்திரவேல், கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கள்ளப்பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சம்பவத்தன்று கணேசன், சரவணன் ஆகிய இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் கட்டையால், கணேசனை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் பதற்றம் அடைந்த சரவணன், கணேசன் மது குடித்து விட்டு மயங்கி கிடப்பதாக சித்திரவேலிடம் பொய் கூறி நாடகமாடியது தெரியவந்துள்ளது.