செய்திகள்
நிரம்பி வழியும் அமராவதி அணை - குளங்களுக்கு தண்ணீர் விநியோகத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி
பாம்பாறு, தேனாறு மற்றும் சின்னாறு ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததால் ஜூலை 23-ந்தேதி அணை நிரம்பியது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 54,237 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த மே 16-ந்தேதி முதல் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. வழக்கமாக ஜூன் மாதம் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் நிலையில் நீர் இருப்பு மற்றும் பெய்த பருவ மழை காரணமாக அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் முதல் முறையாக மே மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கு காரணம் பாம்பாறு, தேனாறு மற்றும் சின்னாறு ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததால் ஜூலை 23-ந்தேதி அணை நிரம்பியது. தொடர்ந்து 3 மாதமாக அணையில் தண்ணீர் ததும்பி நிற்கிறது.
இதனால் ஆறு மற்றும் பிரதான கால்வாய் வழியே ஓரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்கு நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அணை வாயிலாக 2 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதோடு தாராபுரத்திற்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88.69 அடியை எட்டியுள்ளது. இது மொத்த கொள்ளளவான 4.047 மில்லியன் கன அடியில், 3.928.34 மில்லியன் கன அடி நீர் இருப்பாகும். அணையில் வினாடிக்கு 609 கனஅடி நீர்வரத்தும் அணையிலிருந்து ஆற்றில் 550 கன அடி நீரும் கல்லாபுரம், ராமகுளம் கால்வாயில் 50 கன அடி நீரும் வெளியேறுகிறது.