செய்திகள்
பிரதமர் மோடி புலம்பெயர்ந்த பறவை: அசாம் மெகா கூட்டணி விமர்சனம்
அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருவார், செல்வார். ஆனால் எதையும் செய்யமாட்டார் என்று காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி விமர்சனம் செய்துள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்காளத்துடன் அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஏஐயுடிஎஃப், சிபிஐ, சிவிஎம், சிபிஐ (எம்எல்), ஏஜிம் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இன்று பிரதமர் அசாம் மாநிலம் சென்றிருந்தார். அப்போது பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிலையில் பிரதமர் புலம்பெயர்ந்த பறவை என மெகா கூட்டணி விமர்சனம் செய்துள்ளது.
பிரதமர் மோடி இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை அசாம் சென்றுள்ள நிலையில் காங்கிரஸ் இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியிடம் சிஏஏ, மாநிலத்தில் சந்ததியினரின் வேலை வாய்ப்பு, ஆறு சமூகத்தினருக்கு எஸ்டி அங்கீகாரம், அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வு, தேயிலை தொழிலாளர்களுக்கு விலை நிர்ணயம், டீசல் விலை உயர்வு என ஆறு கேள்விகளை கேட்டிருந்தது.
இதுகுறித்து அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ரூபன் போரா கூறுகையில் ‘‘நாங்கள் மோடியிடம் ஆறு கேள்விகள் கேட்டிருந்தோம். அதில் ஒன்றிற்காவது அவர் பதில் அளிப்பார் என்று நம்பினோம். துரதிருஷ்டவசமாக அவர் பதில் அளிக்கவில்லை. அவர் ஒரு புலம்பெயர்ந்த பறவை மாதிரி. மற்றபடி ஒன்றுமில்லை. வருகிறார். செல்கிறார்’’ என்றார்.
மோடி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் வரை அவர் அசாமிற்கு வருவார். அசாம் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கும்போது அவர் ஏன் வரவில்லை?. 2019-ம் ஆண்டு சிஏஏ போராட்டத்தின்போது ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்தபோது ஏன் வரவில்லை’’ என்றார்.