செய்திகள்
விநாயகர் சதுர்த்தியன்று கோவில்களை திறக்க வேண்டும் - இந்து மக்கள் கட்சி மனு
தமிழக அரசு இந்து தலைவர்களையும், மடாதிபதிகளையும் அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்.
திருப்பூர்:
இந்துமக்கள் கட்சியின் மாநில தகவல் தொடர்பாளர் ஹரிகரன் மற்றும் நிர்வாகிகள் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி இந்துக்களால் கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடு எனும் பெயரில் விழா கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாலயே டாஸ்மாக், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொது இடத்தில் சிலைகள் வைத்து வழிபட தடை விதித்துள்ளது. தமிழக அரசு இந்து தலைவர்களையும், மடாதிபதிகளையும் அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்.
கொரோனா விதிமுறைகளின் படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும். இந்தமுறை விநாயகர் சதுர்த்தி வெள்ளிக்கிழமையன்று வருவதால் அன்றய தினத்தில் குறைந்த பட்சம் விநாயகர் கோவிலையாவது திறக்க அனுமதிக்க வேண்டும்.
சாதி வாரி கணக்கெடுப்பு கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.