சென்னை மெரினா கடற்கரையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய மாநகர பஸ்
திருவான்மியூர்:
திருவான்மியூரில் இருந்து சுங்கச்சாவடிக்கு 6டி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. காலை 6.30 மணி அளவில் மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே பஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். மேலும் அப்பகுதியில் நடைபயிற்சி மேற் கொண்டவர்கள் அலறி அடித்து ஓடினர்.
ஒருவழியாக பஸ்சை கட்டுக்குள் கொண்டு வந்த டிரைவர் சாலையின் தடுப்புச் சுவர் ஒரம் நிறுத்தினார். இதில் பஸ்சில் பயணம் மேற்கொண்டவர்கள் கீழே இறங்கி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கண்டக்டர் பஸ்சில் பயணம் செய்த அனைவரையும் பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தார். காலை நேரம் என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து அதிகமாக இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.