ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை

Published On 2020-08-06 09:52 GMT   |   Update On 2020-08-06 09:52 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை வருகிற 9-ந் தேதி நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பூஜையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, நவராத்திரி விழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருகார்த்திகை தீப விழா, சித்ரா பவுர்ணமி, மார்கழி ஊஞ்சல் உற்சவம், சித்திரை விசு கனி காணுதல் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும், வழிபாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடைபெறும்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியார் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும்.

நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜை வருகிற 9-ந் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடக்கிறது. அன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வந்து சேர்க்கப்படும் அங்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

பின்னர் நெற்கதிர்கள், மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்படுகிறது. மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதிஅம்மன் முன் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்துகின்றனர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பூஜையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நிறைபுத்தரிசி சிறப்பு வழிபாட்டுடன் கோவிலில் அதிகாலையில் நிர்மாலய பூஜை, விஸ்வரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷபூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, மதியம் அன்னதானம், மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழபூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

நிறைபுத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி, கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News