ஊத்துக்கோட்டை அருகே நிலத்தகராறில் தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ், விவசாயி. இவரது மகன் வீரராகவன்.
தேவராஜிக்கும் அதே கிராமத்தில் வசித்து வரும் தங்கை துரையம்மாளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நில தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் துரையம்மாளின் கணவர் ஆறுமுகம், மகன்கள் திருநாவுக்கரசு, குமார், பேரன் உதயகுமார் ஆகியோர் பிரச்சினைக்குரிய நிலத்தில் ஏர் உழுதினர்.
இதனை தேவராஜ், அவரது மகன் வீரராகவன் தடுத்தனர். இதில் அவர்களுக்கிடையை மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த துரையம்மாள், ஆறுமுகம், திருநாவுக்கரசு, குமார், உதயகுமார் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் தாக்கினர்.
இதில் தேவராஜ், வீரராகவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வீரராகவன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக பென்னாலூர்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் அழகேசன் விசாரணை நடத்தி வருகிறார்.