உள்ளூர் செய்திகள்
சாலையை ஆக்கிரமித்து நிற்கும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
பேரளத்தில் சாலையை ஆக்கிரமித்து நிற்கும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள பேரளம் ரெயில் நிலையம், சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதி கொண்ட நிலையமாகும். இங்கிருந்து, வெளி மாவட்டங்கள், மற்றும் வெளி மாநிலங்களுக்கு, நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பது வழக்கம். ரயில் நிலையத்திற்கு, நெல் மூட்டைகளை மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்ல நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன.
ரயில் நிலையம், திருவாரூர் -மயிலாடுதுறை நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு நெல் மூட்டைகள் அரவைக்காக, அனுப்பி வைக்க, லாரிகளில் இருந்து, சரக்கு ரயிலுக்கு, நெல் மூட்டைகள் ஏற்றும் பணி நடைபெற்றது. அப்பொழுது, மூட்டைகளை ஏற்றிவந்த, லாரிகள், திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில், ஆக்கிரமித்து நின்றதால், பிற வாகனங்கள் அந்த இடத்தை கடப்பதற்கு, மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும் இருசக்கர வாகனங்கள், கார் போன்ற வாகனங்கள், போக்குவரத்து நெரிசலில், சிக்கி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், பெரிதும் சிரமம் அடைந்தனர்.