செய்திகள்
கைதான ரவீந்தரை படத்தில் காணலாம்.

கொள்ளையர்கள் புதைத்த ரூ.8லட்சத்தை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த திருப்பூர் வாலிபர்

Published On 2021-07-21 11:15 GMT   |   Update On 2021-07-21 11:15 GMT
கொள்ளையடித்த பணத்தில் புதிதாக மோட்டார் சைக் கிள் வாங்கியதுடன், பெங்களூர் சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கி விதவிதமான உணவுகளை வாங்கி சாப்பிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் கோல்டன் நகர் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 47). இவர் பனியன் குடோன் வைத்துள்ளார். கடந்த 14-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குடோனுக்கு சென்றார். மாலையில் வீட்டிற்கு வந்த போது  வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.8லட்சத்து 29ஆயிரம்   கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. 

அதிர்ச்சியடைந்த மாயாண்டி இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது  திருப்பூர் ஜோதிநகரை சேர்ந்த அருண்குமார்(21), பவானிநகரை சேர்ந்த அபிஷேக் (21) மற்றும் சூர்யா (21) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மாயாண்டி  வீட்டில் பணத்தை திருடி ஊத்துக்குளி ரோடு ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதரில் புதைத்து  வைத்ததாக தெரிவித்தனர்.
 
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் பணம் புதைக்கப்பட்ட  இடத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால்அங்கு புதைக்கப்பட்ட இடத்தில்  பணம் எதுவும் இல்லை. இதனால் போலீசார் மற்றும் கொள்ளையர்கள் 3 பேரும் அதிர்ச்சியடைந்தனர்.

 கொள்ளையடித்த பணத்தை 3 பேரும் புதைப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அந்த பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது போலீசார் விசாரணையில்  தெரிய வந்தது.  இதனால் 3பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். 

அப்போது கொள்ளையர்களின் நண்பரான போயம் பாளையம் மும்மூர்த்தி நகரை சேர்ந்த ரவீந்தர் (21), 3பேருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது அவர் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் சுற்றி வரவே சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த நிலையில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது ரவீந்தரே புதைத்த பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.  
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் 3பேரும் ரூ.8லட்சம் பணத்தை புதைப்பதை நோட்டமிட்ட  ரவீந்தர் அந்த பணத்தை திருடியுள்ளார்.

பின்னர் அந்த பணத்தில் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியதுடன்,  பெங்களூர் சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கி விதவிதமான உணவுகளை வாங்கி சாப்பிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மத்தியபிரதேசம்,புனே உள்ளிட்ட  இடங்களுக்கு ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளார். புதிதாக 5 பவுனுக்கு தங்கசெயின் வாங்கி அணிந்துள்ளார். 

பெரிய ஓட்டல்களில் விலையுர்ந்த சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை  வாங்கி சாப்பிட்டுள்ளார். போலீசார் விசாரணையில் வசமாக சிக்கிக்கொண்டார். தொட ர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும்  ரூ.2லட்சம் பணம், தங்க செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News