செய்திகள்
மழை

கனமழை: ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது

Published On 2019-11-25 05:57 GMT   |   Update On 2019-11-25 05:57 GMT
ராமேசுவரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.

ராமேசுவரம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 10 மணி அளவில் சாரல் மழை பெய்யத்தொடங்கியது.

நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. இன்று காலை வரை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. அதிகாலை நடை திறக்கப்பட்டதும் கோவில் ஊழியர்கள் மழை நீரை அகற்றினார்கள்.

இதேபோல் ராமேசுவரம் கோவிலின் உப கோவிலான லட்சுமண தீர்த்தம் அமைந்துள்ள லட்சுமண ஈஸ்வரர் கோவில் மற்றும் நாகநாதர் கோவிலையும் மழைநீர் சூழ்ந்தது.

பாம்பனில் பெய்த பலத்த மழையால் ரோடு பாலத்தின் சாலையில் மழைநீர் தேங்கியது. பாம்பன், மண்டபம் பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அய்யனார் கோவில், தேவதானம் சாஸ்தா கோவில் பகுதியில் பெய்த கனமழையால் புதுக்குளம், புதிய ஆவியார்குளம், கருங்குளம், கொல்லம் கொண்டான், பெரிய கண்மாய் உள்பட 100-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன.

ராஜபாளையம் பகுதியின் குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நகராட்சி குடிநீர் தேக்க ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. தொடர்ந்து மேக மூட்டமாக காணப்படுகிறது.

Tags:    

Similar News