ஆன்மிகம்
காமதேனு வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

சோலைமலை முருகன் கோவிலில் காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு

Published On 2021-11-06 05:12 GMT   |   Update On 2021-11-06 05:12 GMT
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சோலைமலை கோவிலில் காமதேனு வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலாகும். இங்கு நடைபெறும் திருவிழாவில் ஐப்பசி மாதம் நடக்கும் கந்த சஷ்டி பெருந்திருவிழா முக்கியமானது ஆகும். இந்த விழாவானது கடந்த 4-ந்தேதி காலையில் தொடங்கியது. விழாவில் சண்முகார்ச்சனையும், அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.

நேற்று 2-ம் திருநாள். இதையொட்டி நேற்று காலையில் வழக்கம் போல் பூஜைகளும், பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், சர விளக்கு தீபாராதனைகள் நடந்தது.

தொடர்ந்து மேளதாளம் முழங்க காமதேனு வாகனத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி, மூலவர் சன்னதி வெளி பிரகாரத்தில் வலம் வந்தது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் சுவாமிக்கும் வேல் சன்னதியிலும், வித்தக விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

இன்று 6-தேதி 3-ம் திருவிழா யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.நாளை 7-ம் தேதி 4-ம் திருநாள் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 8-ந் தேதி 5-ம் திருநாள் சப்பர வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.

9-ந் தேதி 6-ம் திருநாள், காலையில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மாலையில் 4.30 மணிக்கு வேல் வாங்குதல், 5.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்வும் நடைபெற உள்ளது.

10-ந் தேதி 7-ம் திருவிழா அன்று காலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறும். கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் காலை, மாலை 2 வேளைகளிலும் சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News