செய்திகள்
திருட்டு

மீமிசல் அருகே 8 கடைகளின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு

Published On 2021-09-18 09:33 GMT   |   Update On 2021-09-18 09:33 GMT
மீமிசல் அருகே 8 கடைகளின் பூட்டை உடைத்து பணம்-பொருட்களை திருடப்பட்டன. இந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் கிராமத்தில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளின் உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றிருந்தனர். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது சுமார் 8 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தன. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கடைகளின் உரிமையாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் மீமிசல் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நவீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு போன கடைகளை பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஒரேநாளில் 8 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News