ஆன்மிகம்
சபரிமலை பயணத்தை உள்ளூரிலேயே நிறைவு செய்த ஐயப்ப பக்தர்கள்
ஐயப்பன் சன்னிதியில் இருமுடிகட்டிய பக்தர்கள் நடைபயணமாக புதுவை பாரதிபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று தங்களது பயணத்தை நிறைவு செய்தனர்.
கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 7 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுவும் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள், சனி, ஞாயிற்றுக்கிழமையில் 2 ஆயிரம் பக்தர்கள் என நிர்ணயிக்கப்பட்டு பக்தர்கள் இருமுடி கட்டுடன் ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
மேலும், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம், ஆன்லைனில் முன்பதிவு என பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்தது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் புதுவையின் பல்வேறு இடங்களில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்த பக்தர்களின் சபரிமலை பயணத்தில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.இதைதொடர்ந்து நேற்று புதுவை சித்தானந்தர் கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னிதியில் இருமுடிகட்டிய பக்தர்கள் நடைபயணமாக புதுவை பாரதிபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று தங்களது பயணத்தை நிறைவு செய்தனர்.அங்கு சென்றதும் இருமுடிகளை அவிழ்த்து ஐயப்பசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.