லைஃப்ஸ்டைல்
முதுகுவலி

முதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்

Published On 2020-08-01 09:19 GMT   |   Update On 2020-08-01 09:19 GMT
மனிதனின் உடல் உள் உறுப்புக்கள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக உணர்த்துகின்றது. கழுத்து முதுகுவலி ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.
மனிதனுக்கு அழகு எது? முதுகெலும்புதான். யாராவது நம் வாழ்வில் அதிகம் உதவி செய்தால் இவர்தான் என் வாழ்க்கையின் முதுகெலும்பாகத் திகழ்கிறார் என்று கூறுவது வழக்கம். மனிதன் ஒருவனே தனது முதுகெலும்பை தரையில் படுக்கவைத்து உறங்கும் நிலையைப் பெற்றுள்ளான். மற்ற விலங்கினங்கள் எதுவுமே தனது முதுகெலும்பை தரையில் படுக்க வைத்து உறங்க முடியாது.

முதுகுத்தண்டின் நீளம் பதினாறரை அங்குலம். இது நரம்பு நாளங்களால் ஆனது. இதிலிருந்து 12 இணை நரம்புகள் மூளைக்குச் செல்கிறது. மேலும் முப்பத்தாறு இணை நரம்புகள் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. அதனால் முதுகுத்தண்டு மனிதனின் இரண்டாவது மூளை என அழைக்கப்படுகின்றது.
மூளைக்கும், உடலின் உறுப்புகளுக்கும் இணைப்பு நிலையமாக திகழ்வது இந்த முதுகுத் தண்டு தான். மேலும் இதயம், நுரையீரல், இரைப்பை, குடல் முதலிய உறுப்புகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதும் இந்த முதுகுத்தண்டு தான்.

மனித உடலில் நடுப்பகுதியான முதுகில் 33 முதுகெலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக நேர் வரிசையில் அடுக்கப்பட்டு அற்புதமாக இந்த உடல் கட்டப்பட்டுள்ளது. இந்த முதுகெலும்பு வழியாகத் தான் முதுகுத் தண்டுவடம் உள்ளே செல்கின்றது. இந்த முதுகெலும்பில் 24 எலும்புகள் தனித் தனியானவை. அசையும் தன்மை வாய்ந்தது. மற்ற ஒன்பது எலும்புகள் இணைந்து இரண்டு அசையா எலும்புகளாக பெரியவர்களாக வளரும் பொழுது இடுப்புக்கு அடியில் மாறிவிடும்.

முதுகுவலி உணர்த்துவது என்ன?

மனிதனின் உடல் உள் உறுப்புக்கள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக உணர்த்துகின்றது. அடிமுதுகு வலி ஏற்பட்டால் நமது உடலில் கோணாடு சுரப்பி ஒழுங்காக இயங்கவில்லை. அதனால் சிறுநீரகம் சம்பந்தமான வியாதி வருவதற்கு ஒரு அறிகுறிதான் அடிமுதுகு வலி. இதேபோல் நடுமுதுகு வலி ஏற்பட்டால் சிறுகுடல், பெருங்குடல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம். கழுத்து முதுகுவலி ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.

முதுகுவலி வரக் காரணங்கள்

உடல் பயிற்சி செய்யாமல், நன்றாக அதிகம் சாப்பிட்டு தொப்பை போடுபவர்களுக்கு அடிமுதுகுவலி வரும். சிறுநீரகப் பிரச்சினை இருக்கும். இவர்களுக்கு நடுமுதுகுவலியும் வரும். சிறுகுடல், பெருங்குடல் பிரச்சனை இருக்கும். அதிக நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அடி முதுகுவலி வரும்.
தொடர்ந்து அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற் பயிற்சி செய்யாதிருந்தால் முதுகுவலி (கழுத்து முதுகுவலி) வரும்.
ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படும்.

அடிக்கடி சளி பிடித்தல், மூக்கடைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு கழுத்து, முதுகுவலி ஏற்படும். நுரையீரல் பழுதடைவதால், கழுத்து முதுகுவலி வருகின்றது.
அதிகம் கவலைப்படுபவர்களுக்கு இதயம் பாதிப்பால் கழுத்து முதுகுவலி ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி அதனால் அடிக்கடி காய்ச்சல் வருபவர்களுக்கு முதுகு முழுவதும் வலி இருக்கும்.

காய்ச்சல் எல்லாம் நோயல்ல கழிவுகள் வெளியேற்றம்தான். ஏதாவது ஒரு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிமுதுகுவலி, கழுத்து முதுகு வலி ஏற்படும்.
எதிர்பாராத விபத்தினாலும், முதுகில் பலம் வாய்ந்த எடையுள்ள பொருட்கள் விழுந்தாலும் அடி முதுகில் வலி ஏற்படுகின்றது. இனி கவலையை விடுங்கள். முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அற்புத யோகக்கலையினை பயிலப் போகின்றோம்.

மனித உடல்

நம் உடல் எப்பொழுதும் தன்னைக்காப்பாற்றிக் கொள்ள முயன்று கொண்டேயிருக்கும். அதற்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை. இந்த உடல் தன்னை பாதுகாக்க தானாக ஒவ்வாத உணவை வெளித்தள்ளுகின்றது. எங்காவது பறவை, நாய், பூனை, தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி மருத்துவரிடம் சென்றதைப் பார்த்துள்ளீர்களா? இயற்கையோடு இயற்கையாக வளரும் பிராணிகளுக்கு நோய் வராது. வந்தாலும் தானே சரி செய்துவிடும். ஒவ்வொரு விலங்கிற்கும், மனித உடலுக்கும் அந்த பண்பு உண்டு.

ஏன் இதை இங்கு தெரிவிக்கிறேன் என்றால் எனக்கு முதுகுவலி வந்துவிட்டது என்று யாரும் வருந்த வேண்டாம். பயப்பட வேண்டாம். அவசரப்பட்டு ஒரு மருத்துவர் கூறினார் என்று உடன் அறுவை சிகிச்சைக்கு சென்றுவிடாதீர்கள். முதுகெலும்பில் கத்தியே வைக்கக்கூடாது. அதற்கு நம் புத்தியைக் கூர்மையாக்கி இனிவரும் யோகக்கலையினை பயில்வோம்.

தன் உடலே தன்னைப் பாதுகாக்க முயலும் பொழுது, நீங்கள் இயற்கையான மருந்தில்லா மருத்துவமான யோக்கலைகளை செய்தால் உடல் மிக நன்றாக ஒத்துழைக்கும். விரைவில் பலன் கிடைக்கும். இன்றைய அவசரமான உலகில் முதுகுவலி உள்ளவர்களும், இல்லாதவர்களும் கீழ்கண்ட யோகப் பயிற்சியை தினமும் காலை மாலை பத்து நிமிடங்கள் செய்யுங்கள். வலி இருந்தால் படிப்படியாகக் குறையும். முதுகுவலி இல்லாதவர்களுக்கு நிச்சயமாக பிற்காலத்தில் வராமல் தடுக்கும்.
Tags:    

Similar News