உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான கயல்விழி, சிறுமி வைசாலி.

கார்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலி

Published On 2022-04-15 09:44 GMT   |   Update On 2022-04-15 09:44 GMT
கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணைக்கு சென்ற போது கார், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணைக்கு சென்ற போது கார், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி அருகே உள்ள வாய்க்கால் ரோடு ஸ்ரீராம் புரத்தை சேர்ந்தவர் நவீன்ராஜ் (வயது 32). இவரது மனைவி கயல்விழி (26). நவீன்ராஜ் கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

அதே பள்ளியில் வேன் டிரைவராக குப்புராஜ் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். கும்பராஜிக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும், வைசாலி (8) என்ற மகளும், ஹரி விஷ்ணு (4) என்ற மகனும் உள்ளனர்.

நவீன் ராஜ், குப்புராஜ் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் கூடலூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர். பின்னர் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் கொடிவேரி அணைக்கு குளிக்க சென்றனர்.

நவீன்ராஜ் தனது மனைவி கயல்விழி மற்றும் குப்புராஜ் மகள் வைசாலி ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், குப்புராஜ், தனது மனைவி சிவகாமி, மகன் ஹரி விஷ்ணு ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் கொடிவேரி அணையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது காசி பாளையம் அருகே உள்ள காந்தி நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கோபி நோக்கி வந்த காரும், நவீன்ராஜ் மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன. 

இதில் மோட்டார்சைக்கிள் இருந்து தூக்கி வீசப்பட்ட கயல்விழியும், வைசாலியும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். நவீன்ராஜ் படுகாயம் அடைந்தார்.

அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாய மடைந்த நவீன்ராஜை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த கயல்விழி மற்றும் சிறுமி வைசாலி ஆகியோரின் உடலை கடத்தூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கயல்விழி, வைசாலி உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Tags:    

Similar News