செய்திகள்
அகமதாபாத் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்
அகமதாபாத் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கணேஷ் நகர் அருகே உள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து 14 பேர் வரை பத்திரமாக மீட்கப்பட்டனர் என முதல் கட்டமாக செய்திகள் வெளிவந்தன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றது.
இதற்கிடையே, அகமதாபாத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அகமதாபாத்தில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அகமதாபாத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் நிறைவடைந்தன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.