செய்திகள்
இந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை -ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்
எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது சீனாவுடன் எல்லைப் பிரச்சனை தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, இதுவரை எந்த வெற்றியும் அடையவில்லை. ராணுவ மட்டத்தில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடைபெறும். எந்த முன்னேற்றமும் இல்லாத தற்போதைய நிலை ஆக்கப்பூர்வமானதாக இல்லை. இதே நிலை நீடித்தால் படைகளை குறைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்மூலம், லடாக் எல்லைகளில் இந்தியா படைகளை குறைக்காது என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெளிவுபடுத்தி உள்ளார். இதேபோல், சீனாவும் படைகளை குறைக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.