செய்திகள்
கோப்பு படம்

ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

Published On 2021-10-16 15:21 GMT   |   Update On 2021-10-16 15:21 GMT
ராமநாதபுரத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சபரி(வயது 17). இவர் நேருநகர் 2-வது தெருவில் உள்ள அஜய் என்பவரின் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். ஆயுதபூஜைக்காக கடையை சுத்தம் செய்து சாமி கும்பிட்டனர். இதற்காக கடையின் உள்பகுதியில் இருந்து அலங்கார மின்விளக்கிற்காக மின்வயரை கதவின் உள்பகுதி வழியாக வெளியில் கொண்டு வந்திருந்தனர்.

ஆயுதபூஜைக்கு சாமி கும்பிட்டுவிட்டு நேற்று முன்தினம் வழக்கம்போல சபரி கதவு ஷட்டரை இறக்கி உள்ளார். அலங்கார மின்விளக்கிற்காக மின்சார வயரை கொண்டு வந்துள்ளது தெரியாமல் இறக்கியதால் மின்வயரில் கதவு சிக்கி மின்சாரம் கதவின் மீது பாய்ந்து சபரி தூக்கி வீசப்பட்டார்.

மயங்கிய நிலையில் இருந்த சபரியை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரின் தந்தை சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News